February 05, 2010

தாயுமானவர் பாடல்கள்

நீஅற்ற அந்நிலையே நிஷ்டை; அதில் நீ இலையோ?
வாழ்அற் றவனே மயங்காதே; - போய்அற்று
இருந்தாலும் நீபோகாய்; என்றும்உள்ளாய்; சும்மா
வருந்தாதே; இன்பம்உண்டு வா.

பார்அனைத்தும் பொய்எனவே பட்டினத்துப் பிள்ளையைப்போல்
ஆரும் துறக்கை அரிதுஅரிது; - நேரே
மனத்துறவும் அப்படியே; மாணா! இவற்றில்
உனக்குஇசைந்த வாறுஒன்றே ஓர். ----- தாயுமானவர்

February 03, 2010

719. குற்றம் என்பது என்ன? குற்றம் ஒழிய வழி

எண்ணம், சொல், செயல்களதன் விளைவைக்கொண்டு
எவருக்கோ, எப்போதோ துன்பம் நேர்ந்தால்
மண்ணுலகில் அத்தகைய செயல்கள் தம்மை,
மதிக்கின்றோம் குற்றம் என்று அனுபவத்தால்,
விண்ணறிவு அதிகரித்து, மக்கள் பெற்ற
வசதிகளை நன்முறையில் பயன்படுத்தி,
உண்ண உடுக்க வாழ மனிதர்க்கெல்லாம்
உரிமை சமமாய் அமைத்தால் குற்றம் ஏது?

February 02, 2010

718. மனிதனின் செயலுக்குச் சமூகமே காரணம்

ஒருவனின் எண்ணம், சொல், செயல்களாலே
உண்டாகும் விளைவு எல்லாம் உலகமீது
தருகிறது பலர் வாழ்வில் துன்பம் இன்பம்,
தனித்தனியே அச் செயலின் தன்மைக் கேற்ப
நிருவிகற்ப நிலையினில் இந்நீதி கண்டால்
நில உலகில் மனிதர் செய்யும் குற்றங்கட்கு,
பருவமதற் கேற்றபடி மனிதர் வாழ்வைப்
பண்படுத்தா தவறு அன்றோ? இது யார் குற்றம்?